தேசபந்து தென்னக்கோன் விவகாரம் – முதல்முறையாக கூடிய குழு

தேசபந்து தென்னக்கோன் விவகாரம் – முதல்முறையாக கூடிய குழு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது.

இந்தக் குழுவுக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமை தாங்குவதுடன், நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ. எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். இக்குழு மீண்டும் 25ஆம் திகதி கூடவுள்ளது.

2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 05ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு குறித்த சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This