
டிட்வா புயல் – பாதிப்புகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கி பிரதிநிதிகள் குழு வருகை
டிட்வா புயலினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகள் தொடர்பான விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, உலக வங்கி பிரதிநிதிகள் அடங்கிய குழு விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
பேரிடர் சேதம் மற்றும் அதன் மொத்த தாக்கங்களை மதிப்பிடும் இந்த செயன்முறையில், உலக வங்கியுடன் இணைந்து மேலும் பல சர்வதேச அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இத்தாலி அரசு சார்பில் ஏழு நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் தலா ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார குழுக்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச குழுக்களின் வருகை, புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
