கொழும்பு மாநகர ஆட்சி: இரகசிய வாக்கெடுப்புக்கு அஞ்சுகிறது சஜித் அணி

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியை தீர்மானிப்பது தொடர்பான வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும், சுயேச்சைக்குழுவும் பெறவில்லை.
எனினும், அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு பெறப்பட்டுவிட்டது என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. மறுபுறத்தில் எதிரணிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது.
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பான கூட்டத்தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பை நடத்தாமல், அதனை வெளிப்படையாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.