தென் சீனக் கடலில் சீனாவின் கப்பல்கள் மோதி விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு

தென் சீனக் கடலில் சீனக் கடற்படை மற்றும் சீனக் கடலோர காவல்படை கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் சீனாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் நேற்று (11) பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகைத் துரத்தும்போது கப்பல்கள் மோதி விபத்துக்குளானதாக கூறப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் படகு மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் தங்களை துரத்தி வந்த இரண்டு சீனக் கப்பல்களும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும் கப்பல்கள் தொடர்பில் சீனா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், தென் சீனக் கடலில் தங்கள் எல்லையை கண்காணித்து வருவதாகவும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
தென் சீனக் கடல் உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதையாகும். இதன் மூலம் 60% இற்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது. அதில் ஸ்கார்பாரோ ஷோல் என்பது 2012 ஆம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி ஆகும்.