இஸ்ரேல் பிரதமரை கைது செய்வோம் : கனடா பிரதமர் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் கனடா நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது.
அதேசமயம் அவருக்கு எதிரான கைது உத்தரவு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.