மலையக அதிகார சபைக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு: மகஜர் கையளிப்பு

பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி மலையக சமூகத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுங்கள் எனும் கோரிக்கையை வலியுறுத்தும் பொதுமக்கள் மனுவை மலையக அரசியல் அரங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
22-10-225 புதன் கிழமை பத்தரமுல்ல யில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அதன் உயர் பீட உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா , கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார், ஆரோக்கியம் பிரான்ஸிஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இச்சந்திப்பு குறித்து மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கலைப்பதற்கு என பட்டியலிடப்பட்ட மலையக அதிகார சபை கலைக்கப்படக் கூடாது , மாறாக அதற்கு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதியீட்டம் செய்து வலுப்படுத்தி மலையக சமூகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும்,
அதிகார சபையை மறுசீரமைப்பு எனும் போர்வையில் எந்தவிதத்திலும் அதிகார குறைப்பு செய்யக் கூடாது எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்ட மனுவினை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் கையளித்தோம்.
அண்மையில் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவை அமர்விலும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கையில் ‘இந்திய/ மலையகத் தமிழர்’ என சனத்தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படும் மக்களை ‘மலையகத் தமிழர்’ அன அங்கீகரிப்பதாகத் தெரிவுத்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த அதேநேரம், இலங்கையில் வட கிழக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களது இனத்துவ அடையாளஙகளுக்கு முன்பதாக ‘இலங்கை’ எனும் தேசிய அடையாளத்துடனேயே சனத் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படுகின்றனர்.அதேபோல மலையகத் தமிழர்களும் ‘இலங்கை மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்தபபடல் வேண்டும்.
அதே நேரம் தற்போதைய இந்திய தமிழர் என்பதற்கு பதிலாக ‘இந்திய வம்சாவளியினர்’ எனும் பகுதி உருவாக்கப்படல் வேண்டும். அதன் மூலம் இந்திய வம்சாவளி அடையாளத்தை விரும்பும் தமிழரும் தமிழரல்லாத இந்தியரும் அதனைத் தமது அடையாளமாகக் கொள்ள முடியும் எனும் எமது முன்மொழிவையும் செய்திருந்தோம்.
அதிகார சபை கலைக்கப்படமாட்டாது என உறுதியளித்த அமைச்சரிடம் அதனை அரசாங்கத்தின் சார்பில் எழுத்துமூல அறிக்கையாக வழங்குமாறு வேண்டிக் கொண்டோம்.
அதிகார சபைக்குரிய ஆளணியினராக மலையக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு என நியமனம் வழங்கப்பட்டு தற்போது வெவ்வேறு பணிகளில் அமர்த்தப்படுள்ள பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர்களை ( PCCF) இணைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து மலையக மாவட்டங்களிலும் பிரதேச செயலகங்களூடாக அதிகார சபையின் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனும் எமது ஆலோசனையையும் முன்வைத்தோம்.
அண்மையில் பண்டாரவளை யில் இடம் பெற்ற வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்குதலில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுமூகமான இந்தக் கலந்துரையாடலை அடுத்து மக்கள் மனு வினை ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவைக்கு சேர்ப்பிக்குமாறு அமைச்சரவையின் மூத்த உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசியல் உயர்பீட உறுப்பினருமான விஜித்த ஹேரத்திடம் கையளித்தோம்.
எமது வேண்டுகோள்கள் குறித்து தெளிவாகக் கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் கவனத்துக்கு மேற்படி விடயங்களைக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.