தற்கொலை செய்வோரில் பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடாமிடம்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை செய்வோரில் இரண்டாம் இடத்தினைக் கொண்டுள்ளதாகவும் தற்கொலைகளை தடுக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
உலக தற்கொலை தடுப்பு தினம் 2025 குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் ஆர்.கமல்ராஜ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உளநல பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி மருத்துவர் டான் சௌந்தரராஜன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள உளநல பிரிவின் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது தற்கொலை தடுப்பு குறித்த துல்லியமான, பாதுகாப்பான மற்றும் இரக்கமுள்ள செய்திகளை பரவலாக பரப்புவதை உறுதி செய்யவும். மனநலம் மற்றும் சமூக ஆதரவின் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை வலுப்படுத்தவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக களங்கத்தைக் குறைப்பதற்கும், தற்கொலைகளில் இருந்து உயிர்களை காப்பாற்றுவதற்கும், நேரடியாக பங்களிக்கவும், ஊடகவியலாளர்கள் செயற்படுதல் அவசியம் விரிவான கருத்துப் பகிர்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் செயற்படும் உளநல பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தில் அதிகரித்துள்ள தற்கொலைகளை தடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் விரிவான விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.