
தலங்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆழமான மற்றும் துரிதமான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
