செம்மணியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனக் கோரி, வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் யாழ்ப்பாணம், செம்மணியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன் போது அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
“இலங்கை அரசே, எம்மிடமிருந்து வலிந்து அபகரிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோருக்கு நீதி கோருகிறோம்” என்ற தொனிப்பொருளில், வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நேற்று (2025 ஜூன் 20) காலை 10 மணி முதல் செம்மணியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“நீதி வேண்டும்! நீதி வேண்டும்! செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும்!”, “இது மண்ணல்ல, புதைந்த உண்மை; அதைத் தோண்டி வெளிக்கொணருவோம்!”, “ஐ.நா. செவிகொடு, ஜனாதிபதி கண்விழி, மனித உரிமைகளைப் பாதுகாப்பீர்!”, “புதைகுழிகள் அடைக்கலம் அல்ல, உண்மை பேசும் தளங்கள்!”, “விசாரணையைத் துரிதப்படுத்து!”, “செம்மணிக்கு ஒரு நீதியா, பட்டலந்தவுக்கு ஒரு நீதியா?” ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர், மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காகவும், செம்மணி புதைகுழி பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும், அதிகளவு பொலிஸார் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.