டெஸ்ட் போட்டிகளில் இருந்து எஞ்சலோ மெத்திவ்ஸ் ஓய்வு

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலியில், பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை.
எனது தொழில் வாழ்க்கை முழுவதும் எனது உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைகளில் எனக்காக இருந்த ஆயிரக்கணக்கான இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எனது நாட்டிற்காக நான் விளையாடும் இறுதி டெஸ்ட் போட்டியாகும்.
தேர்வுக் குழுவினருடன் கலந்துரையாடியது போல் நான் டெஸ்ட் வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனினும், நாட்டிற்கு தேவைப்பட்டால் வெள்ளை பந்து வடிவ (ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையேடுவேன்.
இந்த டெஸ்ட் அணி திறமையான அணி என்று நான் நம்புகிறேன். நம் நாட்டிற்காக பிரகாசிக்க ஒரு இளைய வீரர்களுக்கு வழிவகுக்க இதுவே சிறந்த நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி எஞ்சலோ மெத்தியூஸ் 16 சதங்கள், 45 அரைசதங்கள் அடங்கலாக 8,167 ஓட்டங்களை குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.