தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்வரும் 24,25 மற்றும் 28, 29ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூத்தியாகியுள்ளதுடன், வாக்கு பெட்டிகளும் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பதற்கான தெரிவு முன்னதாக வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் பதிவான சில சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை அது தவிர்க்கப்பட்டுள்ளது.
எனவே, அலுவலக அடையாள அட்டையை ஆள் அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கின்ற தபால் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டை அடையாளமிட வாய்ப்பளிக்கக்கூடாது. தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தபால் மூல வாக்களிப்பின்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.