
ஈரானின் ஹார்முஸ் நாயகன் கொல்லப்பட்டார் – இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு
தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் மற்றுமொரு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவை வழிநடத்திய டங்சிரி, பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹர்முஸ் நீரிணையை மூடும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு டங்சிரியிடம் இருந்தது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் இருந்து கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த 20 நாட்களாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் நீரிணையை தனது இரும்பு பிடிக்குள் அலிரேசா டங்சிரி வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் பிறந்த டங்சிரி, ஈரான்-ஈராக் போர் மற்றும் 1980களில் அமெரிக்கா ஈரானுடன் நடத்திய முதல் மோதலான டேங்கர் போர்கள் என்று அழைக்கப்படும் போர்களில் பணியாற்றினார்.
பின்னர், ஐ.ஆர்.ஜி.சி கடற்படையில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்.
தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, பந்தர் அப்பாஸில் உள்ள ஐ.ஆர்.ஜி.சி கடற்படையின் முதலாவது கடற்படை மாவட்டத்திற்குத் தலைமை தாங்கி, 2010 முதல் 2018 வரை துணைத் தளபதியாகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
