ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் – முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் காற்றின் தர அளவு ஓரளவு ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால், இயலுமானவரை முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது.
வடக்கிலிருந்து வரும் மாசுபட்ட காற்று இவ்வாறு காற்றின் தரம் குறைவதற்குக் காரணம் என்றும், நாடு முழுவதும் காற்றின் தர அளவுகள் எதிர்வரும் நாட்களில் ஓரளவு ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது, குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளது.
வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மிதமான அளவு பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.