ஏர் இந்திய விமான விபத்து – 241 பேர் உயிரிழப்பு, அதிஷ்டவசமாக உயர் தப்பிய ஒரேயொரு பயணி

இந்தியாவில் நேற்ற வியாழக்கிழமை பிற்பகல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12.41 மணிக்கு ஏர் இந்திய விமான நிறுவனம் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் என 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
“ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.
12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்த்துகீசிய நாட்டவர்கள் மற்றும் ஒரு கனேடிய நாட்டவர் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆவார்.”
மேலும், “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் தேவைகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகள் மீது எங்கள் முயற்சிகள் இப்போது முழுமையாக கவனம் செலுத்துகின்றன.
கூடுதல் ஆதரவை வழங்க ஏர் இந்தியாவின் பராமரிப்பாளர்கள் குழு இப்போது அகமதாபாத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.
மேலும் தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மேலும் தகவல்கள் கிடைக்கும்போது ஏர் இந்தியாவின் எக்ஸ் தளம் (https://x.com/airindia) மற்றும் http://airindia.com இல் வழக்கமான புதுப்பிப்புகள் தொடரும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் பிழைத்த ஒரே நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரான விஸ்வாஷ் குமார் ரமேஷ் என அடையாளம் காணப்பட்டார்.
அவர் போயிங் 787-8 ட்ரீம்லைனருக்குள் வேறு வரிசையில் இருந்த தனது சகோதரர் அஜய் குமார் ராகேஷுடன் (45) இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
ஊடகங்களிடம் பேசிய ரமேஷ், “புறப்பட்ட முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது” என்றார்.
இறந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர், அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தார்.
உயரத்தை எட்ட சிரமப்பட்ட விமானம், ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கான விடுதியில் மோதியதில் உடனடியாக ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
விபத்திற்கு பின்னர் 265 உடல்கள் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.