வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் என்பன ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டத்தை தயாரிப்பது எனவும் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தில் இதனைச் செயற்படுத்துவது என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Share This