கொவிட் 19 உப திரிபான ஜே.என்.1 குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்

ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொவிட் 19 தொற்றின் உப திரிபான ஜே.என்.1 திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த திரிபு இதுவரையில் இலங்கையில் பதிவாகவில்லை என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் புதிய கொவிட்-19 திரிபு தொடர்பில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில் புதிய திரிபுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய கொவிட்-19 திரிபு பரவும் அபாயம் இல்லாததால் மக்கள் அச்சம் கொள்ள அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.