பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி

இந்தியாவில் பெண் பயணி ஒருவரை வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி பொது வெளியில் தாக்கிய சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.
பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவர் கடந்த 13ஆம் திகதி அலுவலகத்துக்கு வாடகை மோட்டார் சைக்கிளை முன்பதிவு செய்துள்ளார்.
எனினும், குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி மிக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதாகவும், வீதி சமிக்ஞைகளை பின்பற்றாது குறுகிய பாதை என தெரிவித்து வேறு பாதையில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் சாரதியிடம் மெதுவாக செல்லுமாறு ஸ்ரேயா கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அந்த சாரதி எனக்கு எப்படி வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று தெரியும்.
ஐந்து ஆண்டுகளாக நான் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் மோட்டார் சைக்கிளின் சாரதி ஸ்ரேயாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதில் நிலை தடுமாறிய ஸ்ரேயா கீழே விழுந்தார். இதை அப்பகுதியில் இருந்த சிலர் கையடக்க தொலைபேசியில், படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரேயா, ஜெயநகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து ஸ்ரேயா, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் ஸ்ரேயாவை, சுகாஷ் தாக்கியது உறுதியானது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.