விபத்தில் சிக்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.