
உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது
“உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாகவே இருந்தது. 1815 இல் கடைசி மன்னனின் ஆட்சிகாலத்தில்கூட நாடு சிறப்பாகவே இருந்தது. வெளிநாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கவில்லை.
சுதந்திரத்தின் பின்னர்கூட 1950வரை இலங்கை வெளிநாட்டு கடன் பெறவே இல்லை. 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்தது எமது நாடு. ஆனால் இன்று வெளிநாடுகளை தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
உறுதிமொழி அரசியல் கலாசாரம் வந்த பின்னரே இந்நிலை ஏற்பட்டது. இனி பொய்கூறி ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற விடயமாகவே இருக்கும்.” – என்றார் கிரியல்ல.
