
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுண் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் நூறு கோடிக்கும் அதிக பெறுமதியான பல்வேறு சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுண் தங்கம், 64 வாகனங்கள், 6 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்குத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று, இந்த ஆண்டில் இதுவரை 204 பவுண் தங்கம், 13 வாகனங்கள், 67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள், மற்றும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
