பனை உற்பத்திப் பொருட்கள் – வடக்கு ஆளுநர் வெளியிட்ட செய்தி

‘‘பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.‘‘ இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து நடத்தும், வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்னும் தலைப்பிலான கண்காட்சியை, நல்லூர் முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று செவ்வாய்க்கிழமை காலை (22.07.2025) ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு கண்காட்சிக் கூடங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.
இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், மில்வைக்ட் கனகராஜா சகல இடங்களிலும் பனை விதைகளை நடுகை செய்து பனையை வளர்த்த ஒருவர். பனைகள் இல்லாத தேசம் இருக்கக் கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டவர். அவரின் நினைவு நாள் இந்தப் பனை வாரத்தின் ஆரம்ப நாளாக உள்ளது. எனக் கூறினார்.