அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி: ஆராயுமாறு வலியுறுத்து

அரசியல் கட்சிகளுக்கு நிதி வரும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வழிவகுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, எந்த நாட்டில் இருந்து அனுப்படுகின்றது, எந்த அமைப்புகளிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை விசாரிப்பதற்குரிய எந்தவொரு அமைப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏற்படுகின்ற போராட்டங்கள், ஆட்சி மாற்றத்துக்குரிய சதி முயற்சிகள் , பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றுக்கு கூட கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் பயன்படுத்தப்படக்கூடும். எனவே, கட்சிகளுக்கு வரும் நிதியை ஆராய்வதற்காக ஒரு சட்டமூலம் உயரிய சபையில் கொண்டுவரப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லாததால் அந்த நிதியை வைத்து நாட்டைக் குழப்புவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.” – எனவும் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டார்.