பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பில் பறக்க தடை

பாகிஸ்தானின் விமானங்கள் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இந்தத் தடை பாகிஸ்தான் இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் அதேவேளை இந்தியா – பாகிஸ்தானிடையே நேரடி விமான சேவைகள் இல்லை என்பதுடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.