
கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு சவால்
கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அவர் க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 2025 ஆம் ஆண்டுக்கான கணித வினாத்தாள் பாரிய பிழைகளைக் கொண்டுள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வினாத்தாளில் ஒரேயொரு உண்மையான எண்கணித கேள்வி மட்டுமே இருந்ததாகவும், ஏனைய கேள்விகள் பிழைகளால் நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வினாத்தாள் மாணவர்களின் அறிவைச் சோதிப்பதை விட, அவர்களைத் தோல்வியடையச் செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி உயர் அதிகாரிகளுக்கு நான் சவால் விடுகிறேன். உங்களால் இந்த வினாத்தாளுக்கு விடையளிக்க முடியுமா எனப் பாருங்கள் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இருந்ததைப் போல எண்கணிதம், இயற்கணிதம் மற்றும் வடிவியல் போன்ற பாடங்கள் தனித்தனியாக ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கணித அறிவின் வீழ்ச்சியானது மாணவர்களிடையே தர்க்கரீதியான சிந்தனையைக் குறைப்பதாகவும், இதுவே நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கக் காரணம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளம் பிள்ளைகள் மீதான கல்வி அழுத்தத்தைக் குறைக்க ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ஒழுக்க விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராமப்புற பாடசாலைகளில் நவீன ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதுடன், ஆசிரியர் நியமனங்களில் கடுமையான தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு கணித வினாத்தாளில் தான் கண்டறிந்த தொழில்நுட்ப ரீதியான பிழைகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அதனை பரீட்சை திணைக்களம் மற்றும் பிரதமரின் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நிமல் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
