வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால்  75 பில்லியன் ரூபா இழப்பு

வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் 75 பில்லியன் ரூபா இழப்பு

அனர்த்தங்களால் வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில்
கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்துடன் இதன்போது நாட்டில் ஏற்பட்ட பேரழிவின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாக மீட்டெடுக்கவும், மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகளுக்கும் சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், இந்தப் பேரழிவின் காரணமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 316 வீதிகள் மற்றும் 40 பாலங்கள் சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் நாடு முழுவதும் ரயில்வேக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் பிராந்திய வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு இதுவரை மேற்கொள்ளப்படவில்லையென குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பிராந்திய வீதிகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க அமைச்சகத்தின் தலைமையில் திட்டமொன்றை தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )