
71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (6) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
