மலையக காந்தி கே. இராஜாலிங்கத்தின் 63 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

மலையக காந்தி கே. இராஜாலிங்கத்தின் 63 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் கே. இராஜலிங்கம் ஐயாவின் 63ஆவது நினைவு தினம் இன்று (11) மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

புசல்லாவை, சங்குவாரி தோட்டத்தில் – அன்னாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, பெருந்தலைவர் நினைவுகூரப்பட்டார்.

புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் T. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் சிவசாமி வீரப்பன் பங்கேற்று அன்னாரின் பண்புகள், போராட்ட மனப்பாங்கு மற்றும் சமூக நீதி மீதான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.

குடும்பத்தின் சார்பில் C. ஜெயகுமார் கலந்து கொண்டு, தலைவரின் நினைவுகளை பகிர்ந்தார்.

நிகழ்வை ஆசிரியர் கமலநாதன் (கமல்) தொகுத்து வழங்கினார். ஆசிரியர் S. புவனேந்திரன், சுயாதீன ஊடகவியலாளர் இராமசந்திரன் சனத் உள்ளிட்டோர், பெருந் தலைவரின் சேவைச் சுவடுகளை நினைவுகூர்ந்தனர்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் கே. சண்முகராஜ் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

63 ஆண்டுகள் கடந்தாலும், அவரது சேவை, தியாகம், நேர்மை ஆகியவை புதிய தலைமுறைக்கு வழிகாட்டியாகத் தொடர்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )