
‘டித்வா’ புயல் காரணமாக 3.74 இலட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்
‘டித்வா’ காரணமாக இலங்கையில் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகத் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் மாதமொன்றுக்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் 23 சதவீதம் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, தேயிலைத் துறையில் 35 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தேயிலை உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இந்த அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
