
386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது
சுமார் 600,000 ரூபாய் மதிப்புள்ள அலங்கார செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 19 வயது இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து நள்ளிரவு 12:35 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் TG 307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன் போது அவர் கொண்டுவந்த பொருட்ளை ஆய்வு செய்த அதிகாரிகள், பிலோடென்ட்ரான், அக்லோனெமா, அலோகாசியா மற்றும் மான்ஸ்டெரா இனங்களைச் சேர்ந்த மொத்தம் 386 அலங்காரச் செடிகளைக் கண்டுபிடித்தனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
