உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள்

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தகுதி பெற்ற வாக்காளர்களுக்கு மேலதிகமாக இந்த புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி மற்றும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, புதிய வாக்காளர்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தே்ரதலுக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது தயார் செய்து நிறைவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை (12) நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தபால்மூலம் வாக்களிக்க தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் நாளைய தினத்திற்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை தொடர்புபட்ட மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This