ரஷ்யா மீது 100% வரி விதிப்பு? – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இன்று (14) வெள்ளை மாளிகையில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடனான சந்திப்பின்போது, 50 நாட்களுக்குள் உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்த வரிகள் அமுல்படுத்தப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
இந்த வரிகள், ரஷ்ய எண்ணெய், இயற்கை எரிவளி, யுரேனியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படும். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று டிரம்ப் கூறினார்.
இந்தியா (2024இல் 35% ரஷ்ய எண்ணெய் இறக்குமதி), சீனா (19%), மற்றும் துருக்கி (2023இல் 58% பதப்படுத்தப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி) போன்ற நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம். மேலும், அமெரிக்க செனட்டர்கள் 500% வரிகளை விதிக்கும் மசோதாவை ஆதரித்துள்ளனர். இது ரஷ்யாவின் போர் முயற்சிகளை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
டிரம்ப், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததால் “மிகவும் அதிருப்தி” அடைந்துள்ளதாகவும், உக்ரைனுக்கு “மிக உயர்ந்த தர” ஆயுதங்களை நேட்டோ மூலம் அனுப்புவதாகவும் கூறினார்.