பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு –  அமைச்சின் விசேட அறிவிப்பு

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு – அமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட கைத்தொழில்கள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை, சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு, தேசிய உற்பத்தித்திறன் செயலகம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் தேசிய வடிவமைப்பு நிலையம் ஆகிய நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட கைத்தொழிலாளர்களுக்கு இந்த 02 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக கைத்தொழில் உரிமையாளர்கள் www.industry.gov.lk எனும் இணையத்தளம் ஊடாக அல்லது மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச
செயலகங்களில் உள்ள தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறு தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக இது தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையொன்றை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது, அத்துடன் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் அமைச்சுக்கு தகவல் வழங்குவதற்கு “0712666660” எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை விரைவில் வழங்குமாறும் கைத்தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்களை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் உள்ளிடுதலை www.industry.gov.lk ஊடாக அல்லது https://aid.floodsupport.org/business-impact ஊடாக மேற்கொள்ள முடியும்.

தேவையான ஒத்துழைப்பை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )