ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா

அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற இந்த அணு சக்தி ஏவுகணையை கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001ஆம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டன.
இதையடுத்து 9எம்730 புரேவெஸ்ட்னிக் என்று அணு சக்தி ஏவுகணையை ரஷ்யா அறிமுகம் செய்தது. இதை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டத்துக்கான ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார். இந்த ஏவுகணையை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செலுத்த முடியும். இது பறந்து செல்லும் பாதையையும் கணிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த ஏவுகணையை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்றதாக ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறினார்.இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து உக்ரைன் போரை நடத்தி வரும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேசினார். போர்க்கால சீருடை அணிந்து பேசிய புட்டின், ‘‘இது போன்ற சக்திவாய்ந்த ஏவுகணை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை. இது போன்ற ஆயுதத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என ரஷ்ய நிபுணர்கள் முன்பு கூறினர். ஆனால் தற்போது, இந்த முக்கிய பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது’ என பெருமிதத்துடன் கூறினார்
