எல்ல பகுதயில் குவியும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
(க.கிஷாந்தன்)
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவில் இருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் இலங்கைக்குச் வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன அந்த வகையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து எல்ல பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
எல்ல பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நகரவே முடியாத சூழல் காணப்படுகின்றன.
வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பூங்கா, ராவணஎல்ல நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஹோட்டல்கள் என்பவற்றுக்கு அதிகம் செல்வதாகவும் இதனால் எல்லவில் வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதிக சுற்றுலா பயணிகள் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விஷயங்களை அனுபவித்து மகிழ்கிறார்கள். இந்த பகுதியில் 9 வளைவுகள் கொண்ட பாலம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக காணப்படுகின்றது.