
மீண்டும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா ?
இன்றைய தினம் பஸ் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, பஸ் கட்டணங்களை குறைந்தபட்சம் 15 % அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேநேரம் இன்று நாட்டின் தனியார் பஸ்களில் சுமார் 90 % சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார் .
இதனால் இன்றைய தினம் பஸ்களை இயக்காதிருக்க பஸ் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும்
புதிய பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பஸ் சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார் .
