
அவுஸ்ரேலியாவை அதிரவைக்கும் ‘நரெல்லே’ சூறாவளி
அவுஸ்ரேலியாவின் வடக்கு மாகாணத்தை நோக்கி ‘Narelle’ தீவிர சூறாவளி மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால், அங்கு மிக உயர்மட்ட அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போரோலூலா, நம்புல்வார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ‘கேப் யார்க்’ பகுதியில் கரையை கடந்த இந்த சூறாவளி, தற்போது ‘வளைகுடா’ பகுதியில் வலுவடைந்து இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் Katherineஆற்றில் திங்கட்கிழமை பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பாதுகாப்பு கருதி சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நம்புல்வார் பகுதியில் இருந்து டார்வின் நகருக்கு இராணுவ விமானம் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசும்போது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வீட்டின் பாதுகாப்பான சிறிய அறைகளில் தஞ்சம் புகுமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் நிவாரண நிதி ஒதுக்கீடுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
