
உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லை
இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சென். லூசியஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனையின் போது கொழும்பு பேராயர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
கிறிஸ்தவம் என்பது வெறும் சடங்குகளோ அல்லது போதகர்களால் உலகிற்குச் சொல்லப்படும் பிரசாரமோ அல்ல. அது அன்பினால் நிறைந்த ஒரு உன்னதமான வாழ்க்கை முறை எனவும் தெரிவித்துள்ளார் ..
கிறிஸ்து வாழ்ந்து காட்டிய நெறி என்பது அன்பின் சேவகனாக இருப்பதாகும் எனவும் இறைவனுக்கு முன்பாகவும், சக மனிதர்களுக்கு முன்பாகவும் நேர்மையாகவும் நீதியோடும் வாழ்வதே உண்மையான ஆன்மீகம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார் .
ஒரு தலைவன் என்பவன் அதிகாரத்தைச் செலுத்துபவன் அல்ல, அவன் ஒரு சேவகனாக இருக்க வேண்டும் என்பதே கிறிஸ்துவின் போதனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இத்தகைய தலைவர்களின் சிந்தனையில் அமைதியை விதைக்க தாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
