
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன.
இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் பிப்ரவரி 26-ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கு, மாணவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் குமார் லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மாணவர்கள் இன்றைய தினம் மனதை மிகவும் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
இன்று இரவு கண்விழித்துப் படிப்பதைத் தவிர்க்குமாறும், புதிய பாடங்களைக் கற்காமல் ஏற்கனவே படித்தவற்றை மட்டும் மீட்டுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர் முதல் 5 நிமிடங்கள் மிக முக்கியமானவை எனச் சுட்டிக்காட்டிய அவர், முதல் வினாவுக்கு உடனடியாக விடையளிக்க முயலாமல், வினாத்தாளை முழுமையாக வாசித்து மிக எளிதான வினாவைத் தேர்ந்தெடுத்துத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த அணுகுமுறை எதிர்மறையான அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறையான நம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்ள உதவும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் மியுரு சந்திரதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
