இன அழிப்பு? மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு

இன அழிப்பு? மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு

இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை.

இலங்கை அரசு என்ற கட்டமைப்பு. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்றதல்ல. அது தமிழ் இன அழிப்புக்  கட்டமைப்பு என்பதை அறிவும் உணர்வும் சார்ந்து வெளிப்படுத்தும் நிகழ்வுதான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். மாறாக வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல என்பதை உலகுக்கு உரத்துக் கூற வேண்டும்.

அதேநேரம், முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால போரிலும் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களின் தியாகத்திலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஏற்பாடாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைதல் வேண்டும்.

சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருதல் என்பது பொது நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கானது.
தமிழ் இன அழிப்புப் பற்றிய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டிய கூட்டு நினைவேந்தலாகும்.

ஆனால் இன அழிப்பு என்பதையோ. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றியோ  சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே மனதார பேசியது கிடையாது. ஏன் போர்க்குற்றம் என்பதைக்கூட ஏற்றுக்கொண்டதாக இல்லை.

சர்வதேச விசாரணையை உள்ளகப் பொறிமுறையாக மாற்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் 2015 இல் மேற்கொண்ட முயற்சியை கோட்டாபய தொடர்ந்தார். அதன் நீட்சியாக ரணில் விக்கிரமசிங்க காய் நகர்த்தினார். தற்போது அநுரகுமார திஸாநாயக்க புதிய வியூகம் ஒன்றை வகுக்கிறார்.

அதேவேளை, எந்தவொரு இடத்திலும் இன அழிப்பு என்றோ,

அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுக் கோரிக்கை எழுச்சி என்றோ மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாக பேசியதும் கிடையாது.

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் போன்றவர்களின் மிதவாத செயற்பாடுகளும் இன அழிப்பு என்பதை மறுத்துரைக்கும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வாய்ப்பாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக தமிழர் பிரதேசங்களில் பல்வேறு கூட்டங்கள் நடைபெறுவது வழமை..

ஆனால், வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகள் இணைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையைக் கூட்டாக வலியுறுத்தும் வகையிலான கூட்டுக் கோரிக்கைக்கு, அந்தக் கூட்டங்களில் மனதார முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூற முடியாது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில தலைவர்களும் கிறிஸ்தவ குருமார், சைவக்குருமார் உள்ளிட்ட வேறுபலர் இன அழிப்பு என்பதை வெளிப்படையாகக் கூறினாலும், இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்டு, ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை.

அவ்வப்போது அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், கட்சி அரசியல் மற்றும் வேறுபல நிழச்சி நிரலோடு இணைந்ததாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே அந்தக் கூட்டுக் கோரிக்கைகள் அமைகின்றன.

தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்த்தேசியம் என்பதை நிறுவுதற்கான இன அழிப்பு விசாரணைகள் பற்றிய அழுத்தம் திருத்தமான கோரிக்கைகள், மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுக் கோரிக்கைகள் சர்வதேச மட்டத்தில் ஒருமித்த குரலாக முன்வைக்கப்படவேயில்லை.

அதுவும் வடக்குக் கிழக்குத் தாயக மக்களும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அமைப்புகள், கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டுக் கோரிக்கையாக அவை அமையவில்லை.

ஆகவே இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பதை அவ்வாறான கூட்டுக் கோரிக்கையாக மாற்ற வேண்டும். இதற்கான ஏற்பாட்டுக்குப் போதிய கால அவகாசம் தேவைப்படாது. ஏலவே அதற்கான கருத்தியல் மக்கள் மத்தியில் இயல்பாகவே உண்டு.

1956 மற்றும் 58 ஆம் ஆண்டுகளில் தென் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை, கொள்ளைச் சம்பவங்களில் இருந்து 2009 இறுதிப் போரும், அதன் பின்னரான பதின்மூன்று வருடங்களில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், பாரம்பரியக் காணி அபகிரப்புகள், மரபுரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டு பௌத்த சின்னங்கள் பொறிக்கப்பட்டு வருகின்றமை வரையும், இன அழிப்புப் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழி வரலாற்றுப் பாட நூல்களிலும் பௌத்த சமய வரலாறுகள் திணிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ கல்வித் திட்ட விதிமுறைகளுக்கு மாறாகவே தமிழ் இனத்தின் மீது சிங்கள பௌத்த சமய வரலாறு திணிக்கப்பட்டுள்ளது. இது இன அழிப்பின் மற்றுமொரு வகை.

இதற்கு எதிராக யுனெஸ்கோவில் முறைப்பாடு தாக்கல் செய்ய முடியுமென சமீபத்தில் கல்வித்துறைப் பேராசிரியர் அமரர் சோ. சந்திரசேகரம் கூறியிருந்தார்.

இன அழிப்பு முப்பது ஆண்டுகால போருக்கு முன்னரே ஆரம்பித்ததால், இன அழிப்புப் பற்றி விசாரணைகள் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் தமிழ்த் தரப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

கனடாவில் இன அழிப்பு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் உள்ள கனேடிய தூதுவரை அழைத்து எச்சரிக்கைத் தொனியில் கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.
அது மாத்திரமல்ல, அரசியல் இராஜதந்திரிகள் குழு ஒன்றை ஜனாதிபதி அநுர நியமித்துமுள்ளார். இக் குழு கனடாவுக்குச் சென்று, ஈழத் தமிழர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் வாழ முடியும் என்ற விபரங்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த முயற்சியை ஏற்கனவே மகிந்த கோட்டா மற்றும் ரணில் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இன அழிப்பு இடம்பெறவில்லை என்பதை மறுத்து, அநுர அரசு அதன் இறுதிக் கட்ட வரைபு ஒன்றை தயாரித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இன அழிப்பு தொடர்பான மேலதிக ஆவணங்கள் மற்றும் தகவல்கள் பற்றி உரையாடவும் கருத்துக்களை பகிரவும் தமிழ்த்தேசியக் கட்சிகளின்  தலைவர்கள் எவராவது கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்துக்கு எப்போதாவது சென்றனரா என்ற கேள்விகள் எழுகின்றன.

அ.நிக்ஸன்

Share This