புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு

2025 ஆம் நிதியாண்டுக்கான  புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதன்பின்னர்  25ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம்  21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை மார்ச் 2 1ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து நாட்டின் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் தொழிற்சாலைகளுக்கான செலவுக் குறைப்பு முதன்மையாகக் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை 06 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

 

 

Share This