காசா போர் குறித்து அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் கவலை: ஜனாதிபதி பைடன் ஒப்புக்கொண்டார்
காசாவில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளதை தாம் ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு வெள்ளை மாளிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கிவரும் நிலையில் பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக முஸ்லிம்கள் மற்றும் போர் எதிர்ப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதேவேளை அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் மற்றும் அரபு நாடுகள், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றன.
மேலும், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நாடுகள் நிறுத்த வேண்டும் எனவும் அழுத்தத்தினை அதிகரித்து மனித நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
இதேவேளை பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெடிகுண்டுகள் மற்றும் போர் விமானங்கள் என்பனவற்றை இஸ்ரேலுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா கையெழுத்து இட்டுள்ளதாக வெசிங்கடன் போஸ்ட் (Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.