கப்பல் மோதி இடிந்து விழுந்த பால்டிமோர் பாலம்: நீரில் மூழ்கி உயிரிழந்த பணியாளர்கள் - இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/d6fc831c-7ef6-43f4-a4f2-539e897f9ef0/Baltimore_Bridge_collapse_01.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Baltimore Bridge collapse
அமெரிக்கா - பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்கள் மீட்பு பணியாளர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான 27 நாட்கள் பயணத்தை ஆரம்பித்த சரக்கு கப்பல் ஒன்று, துறைமுகத்தை விட்டு வெளியேறிய பின்னர் அதன் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு வேளை என்பதுடன், மின் இணைப்பு முற்றாக தடைப்பட்ட நிலையில் கப்பல் பாலத்தின் ஸ்காட் கீ பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானப் பணியாளர்கள் எட்டு பேர் நீரில் முழ்கிய நிலையில், இருவர் மீட்கப்பட்டு மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காணாமல்போன ஏனைய ஆறு போரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும், மீட்பு பணிக்காக செலவிடப்பட்ட காலம் மற்றும் நீரின் வெப்பநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.
இதன்படி, உயிரிழந்தவர்களின் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பெயர்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, மெக்சிகோவைச் சேர்ந்த 35 வயதுடைய Alejandro Hernandez Fuentes மற்றும் குவாத்தமாலாவை சேர்ந்த 26 வயதுடைய Dorlian Ronial Castillo Cabrera ஆகியோரே உயிரற்ற உடலாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இடிபாடுகளுக்குள் பாதுகாப்பான முறையில் நீருக்கடியில் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.