ஜெர்மனியில் இருந்து சுவிஸ் நோக்கி பயணித்த பேருந்து விபத்து: பலர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
கிழக்கு ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்கு அருகில் A9 அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஏராளமானோர் பலியாகியுள்ளனர்" என்றும் சாக்சோனி மாநில பொலிஸார் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளனர்.
விபத்தின் போது பெர்லினில் இருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகர் நோக்கி பயணித்த பேருந்தில் 53 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A9 நெடுஞ்சாலையானது ஜெர்மனியின் மிக நீளமான மற்றும் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாகும். இது தலைநகரான பெர்லினில் இருந்து தெற்கில் உள்ள முக்கிய நகரமான முனிச் வரை நீண்டுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொளிகளில் சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது.
விபத்தை அடுத்து சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.