பிரித்தானியா வாக்காளர்களின் தகவல்களை ஊடுருவியதா சீனா?: பயணம் மற்றும் பொருளாதார தடை விதிப்பு

OruvanOruvan

Cyber attack

மேற்கத்திய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.

பிரித்தானியாவின் மில்லின் கணக்கான வாக்களர்களின் தகவல் ஊடுருவப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த இணையத் தாக்குதலுக்கு சீனாவின் அரசு நடத்தும் இணையப் பிரிவுதான் காரணம் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும் குற்றம் சாட்டின.

இதனையடுத்து இரண்டு சீன பிரஜைகள் மற்றும் ஒரு நிறுவனத்திற்கு தடைகள் விதிக்கப்படும் என்று பிரித்தானியா திங்களன்று அறிவித்தது.

சீன அரசுடன் இணைந்த இணைய உளவு குழுவான மேம்பட்ட நிலையான அச்சுறுத்தல் குழு 31 (APT31)க்காக வேலை செய்வதாக பிரித்தானியா அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.

பிரித்தானியாவின் தடைகள் அங்குள்ள சொத்துகளை முடக்குவதுடன், வணிகங்கள் தங்கள் நிதி அல்லது வளங்களைக் கையாளுவதைத் தடுக்கும்.

அத்துடன், பயணத் தடை அவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதையோ அல்லது தங்குவதையோ தடுக்கும்.

APT31 இல் பணியாற்றியதாகக் கூறப்படும் ஏழு சீனப் பிரஜைகள் இணைய தாக்குதல் பிரச்சாரத்தை செயல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக அமெரிக்கா கூறியது.

அவர்கள் 14 ஆண்டுகளாக இணைய தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக நிராகரித்தார்.

"இணைய பாதுகாப்பு பிரச்சினைகளை அரசியலாக்குவதை நிறுத்துமாறு அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சீனாவை அவமதிப்பதை நிறுத்துங்கள்.

சீனா மீது ஒருதலைப்பட்ச தடைகளை விதிப்பதை நிறுத்துங்கள். சீனாவிற்கு எதிரான இணைய தாக்குதல்களை நிறுத்துங்கள்," என்று பெய்ஜிங்கில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

"பிரித்தானியா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட APT 31 தொடர்பான தகவல்களுக்கு சீனத் தரப்பு ஏற்கனவே தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் பதிலை அளித்துள்ளது.

இது பிரித்தானியா வழங்கிய சான்றுகள் போதுமானதாக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது" என்றும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை" என்றும் கூறியுள்ளார்.

சீனா தனது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒகஸ்ட் 2021 மற்றும் அக்டோபர் 2022 க்கு இடையில் பிரித்தானிய தேர்தல் ஆணையத்தின் மீதான இணைய தாக்குதல் பிரித்தானிய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.

நபர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் கொண்ட தரவுத்தளங்கள் அணுகப்பட்டது மட்டுமல்லாமல், "கட்டுப்பாட்டு அமைப்புகள்" மற்றும் ஆறு இடைத்தேர்தல்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு இடையே உள்ள முக்கியமான மின்னஞ்சல்களும் அணுகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.