ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்: அவசரமாக விரைந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்

OruvanOruvan

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்று வெள்ளிக்கிழமை அவசரமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

காஸாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது.

போர் தொடங்கியது முதல் ஆறாவது முறையாக இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள ஆன்டனி பிளிங்கன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய பிளிங்கன், “ராபாவில் இஸ்ரேல் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தவறானது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க போவதில்லை. ஹமாஸுடன் போர் புரிய இந்த நடவடிக்கை அவசியமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

ராபாவில் ஹமாஸை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து பிளிங்கன் பேசவுள்ளார். இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் வாஷிங்க்டன் செல்லவுள்ளனர்.

நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான உறவில் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்பட்டு வருகிற சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுதலை குறித்த அமெரிக்கா விடுத்துள்ள ஐ.நா தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு வருவது குறிப்பிடத்தக்கது..