இஸ்ரேல்-ஹமாஸ் போர், காஸாவில் 32 ஆயிரம் பேர் பலி: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்.....
காஸாவில் பலி எண்ணிக்கை 32,000ஐ தாண்டியுள்ளது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடந்துவரும் போரில் குறைந்தது 32,070 பேர் தமது பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ஜாவா மாகாணம் அருகே உள்ள கடல் பகுதியில் ,இன்று இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 17 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய 31 ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்குப் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்தேய நாடுகளிடம் மேலும் இராணுவ உதவிகளை கோரியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளால் பதற்றம்
அமெரிக்காவின் தெற்கு எல்லையான டெக்சாஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் முள்வேலிச் சுவர்களை உடைத்து, எல்லையை தாண்ட முற்பட்டபோது பதற்றநிலை உருவானது. இதன்போது பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு பிரிவினருக்கம், சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது.
உலகின் விலை உயர்ந்த மரபணு சிகிச்சை
மிக அரியதொரு நோய்க்கெனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு சிகிச்சையின் விலை, 4.25 மில்லியன் அமெரிக்க டொலராகும்.இதுவே, உலகின் ஆக விலை உயர்ந்த மருந்தாகும். பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு ‘எம்எல்டி’ எனப்படும் ஒரு குறிப்பிட்ட நோய் வருவதற்கான அடிப்படை காரணத்தைச் சரிசெய்ய, ‘லென்மெல்டி’ எனப்படும் இந்த ஒருமுறை சிகிச்சைக்கு மார்ச் 18ஆம் திகதியன்று அமெரிக்காவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் புதிய விண்வெளி சுற்றுலாத் திட்டம்
சவூதி அரேபியாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள்,விண்வெளிப் பயணத்திற்காக 2026ஆம் ஆண்டில் பதிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் ‘ஹேலோ ஸ்பேஸ் கம்பெனி’, விண்வெளிப் பயணங்களை திட்டமிட்டு நடத்திவருகின்றது. இந்த பயணம் ஹேலோ நிறுவனத்தின் ஆறாவது சோதனைப் பயணமாகும்.பயணத்தின்போது 360 டிகிரி பரந்துபட்ட காட்சியைக் காணும் அனுபவம் பயணிகளுக்குக் கிட்டும் வாய்ப்பும் உண்டு.
உலகின் பெரிய தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 13 பேர் - மீட்கும் முயற்சிகள் தீவிரம்
உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றான ரஷ்யாவின் அமுர் (Amur) சிக்கியிருப்போரை மீட்க 200 மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.குறித்த சுரங்கத்தில் 13 பேர் சிக்குண்டுள்ளனர்.அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை.இருப்பினும் சிக்குண்டவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மூடிய சுரங்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பாறைகளையும் மண்ணையும் அகற்றும் பணி நடக்கிறது.