அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பிரதமர் பெருமிதம்: உலகின் முக்கிய வெளிநாட்டு செய்திகளின் தொகுப்பு...
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பிரதமர் பெருமிதம்
இந்தியாவில் உருவாக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். “ விஞ்ஞானிகளின் சாதனை பெருமிதமளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்தி மோடி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 13 ஆயிரம் பேர் பயங்கரவாதிகள்-நெத்தன்யாஹூ
காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் குறைந்தது 13 ஆயிரம் பயங்கரவாதிகளும் அடங்குவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, நேற்று (10) தெரிவித்துள்ளார்.எனினும்13 ஆயிரம் ஹாமஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பொய்யான வெற்றியை சித்திரிப்பதாக தெரிவித்துள்ளது.
சுமத்ராவில் திடீர் வெள்ளம்; பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பஞ்சுமிட்டாய் - கோபி மஞ்சூரியனுக்கு தடை
உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யா போரில் சிக்கித் தவிக்கும் நேபாளத்தைச் சேர்ந்த நால்வர் இந்தியாவை மீட்குமாறு வேண்டுகோள்
நான்கு நேபாளியர்கள் தங்களை ரஷ்யாவிலிருந்து மீட்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர், தாங்கள் இராணுவத்தில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக மோசடியாக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதற்கு பதிலாக உக்ரேனுக்கு எதிரான போரில் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
ஆஸி. குப்பை தொட்டியிலிருந்து இந்திய பெண் சடலமாக மீட்பு
ஐதராபாத்தை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரின் உடல் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாஸ் பக்லி சாலை ஓரத்தில் உள்ள குப்பை தொட்டிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சைதன்யா மதகனி (Chaithanya Madhagani) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் ஆவார்.
நடுவானில் உறங்கிய விமானிகள்- தீவிர விசாரணைகள் ஆரம்பம்
தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25 ஆம் திகதி பயணித்த விமானம் ஒன்றின் விமானிகள் இருவர; நடுவானில் சுமார் 28 நிமிடங்கள் உறங்கியுள்ளனர். குறித்த இரு விமானிக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தமையே காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இறுதி தேர்தலில் களமிறங்கும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன்
மேற்காசிய நாடான துருக்கியில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் பதவியில் இருந்த எர்டோகன், இம்முறை நடைபெறவுள்ள தேர்தல்களை தனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார்.நான் ஒய்வின்றி உழைத்து வருகிறேன்.சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தின்படி இதுதான் எனது இறுதி தேர்தல் என மேலும் தெரிவித்தார்.
நைஜீரியாவில் ஒரு வாரத்தில் 300க்கும் மேற்பட்ட சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர்
வடக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஒரு வாரத்தில் 300க்கும் மேற்பட்ட சிறுவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.12 வயதுக்குட்பட இந்த சிறுவர்கள் மூன்று தடவைகளில் கடத்தப்பட்டுள்ளனர்.பொலிஸாரும், இராணுவத்தினரும் காடுகளில் தேடுதல் நடத்திய போதிலும் சிறார்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த ஒரு வருடத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ரமழான் பண்டிகையை கொண்டாட தயாராகும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேலிய பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள், காசா போர் மற்றும் பசி பட்டினி, சோகமான மனநிலையுடன் பாலஸ்தீனியர்கள் ரமழான் பண்டிகையினை கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.