சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் பயனடையும் மலேசியா: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தலையீட்டை தவிர்க்குமாறு வலியுறுத்தல்
மலேசியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் உயர் தொழில்நுட்பத் தொழில்களில் சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உள்ள முக்கிய பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்வது இலாபகரமானதாக இருக்கும் என மலேசிய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளரான சங்கரன் நம்பியார், அண்மையில் அளித்த பேட்டியில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் பல்வேறு புதிய துறைகளில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், அதிவேக இரயில்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்பத் துறைகளில் சீனா கணிசமான இலாபத்தை ஈட்டியுள்ளது.
இதன்படி, 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா விளங்குவதாக ஆய்வாளரான சங்கரன் நம்பியார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முதலீடுகளை ஈர்ப்பதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்குமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்போது மலேசியா சிக்கலுக்குள்ளாவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் அண்மையில் நடைபெற்ற, 2024 ஆசியான் - ஆஸ்திரேலியா சிறப்பு உச்சி மாநாட்டின் போது, மலேசிய பிரதமர் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார்.
அதாவது, மலேசியா சீனாவுடன் நட்பாக இருப்பதனை அமேரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தடுக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா தமது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அத்துடன், பல ஆண்டுகளாக மலேசியாவின் முக்கிய முதலீட்டு ஆதாரமாகவும் சீனா இருந்து வருகிறது.
இதனிடையே, 2024 ஆம் ஆண்டில் மலேசியாவின் ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவின் சந்தை தேவை முக்கிய சக்தியாக மாறும் என கெனங்கா (Kenanga) எனப்படும் நிதி சேவை நிறுவனம் அண்மையில் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.