லெபனான் மீது தாக்கினால் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்: ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் முழு வீச்சிலான பெரிய தாக்குதல்களை நடத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
லெபானின் மீது பாரிய தாக்குதலை நடத்த இஸ்ரேல் எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது நெத்தன்யாஹூவின் இறுதி முடிவாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காஸாவில் நடைபெறும் பேர் அதன் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற பதற்றமும் அச்சமும் காணப்படும் நிலையில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
லெபானின் ஹஸ்புல்லா, ஹமாஸ் உட்பட மத்திய கிழக்கில் இயங்கும் பல ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர், லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு மூன்றாவது முறையாக நேற்று விஜயம் செய்தார்.
இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ஒருபோதும் இரு முனைகளில் போராட முடியாது. காஸா புதைகுழியில் இருந்து வெளியேற நெத்தன்யாஹூ போராடி வருகிறார்.
காஸாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்து வருகிறது.
எனினும் நெத்தன்யாஹூ தன்னை தற்காத்து கொள்ள போர் மூலம் தீர்வை தேடி வருகிறார் எனவும் அப்துல்லாஹியன் குறிப்பிட்டுள்ளார்.