போரின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பிக்க எங்கு செல்வது எனத் தெரியாமல் தத்தளிக்கிறோம்: ரஃபாவிலிருக்கும் பாலஸ்தீனர்கள்

OruvanOruvan

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ரஃபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகிறது. அதற்கு முன்பு அங்குள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற திட்டம் வகுக்குமாறு இஸ்‌ரேலிய இராணுவத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அறிவித்துள்ளார்.

ரஃபாவில் உள்ள ஹமாஸ் படைகளை நிர்மூலம் செய்ய அவர் தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் படைகள் அங்கு இருக்கும் வரை ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்க முடியாது என்றார் அவர்.

அண்மையில் ஹமாஸ் அமைப்பு முன்வைத்த போர் நிறுத்தப் பரிந்துரையை ஏற்க இஸ்‌ரேல் மறுத்துவிட்டது. இந்நிலையில், ரஃபா நகரிலிருந்து வெளியேற ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தயாராக இருக்கின்றனர்.

தற்போது ரஃபாவிலிருந்தும் அந்நகருக்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்தும் வெளிவர முடியாமல் பாலஸ்தீனர்கள் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் அங்கிருந்து வெளிவருவதற்கு முன், தாக்குதல் தொடங்கினால் அதனால் ஏற்படும் உயிர்ச்சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ரஃபா மக்களிடையே பதற்றம் அதிகரித்து வருவதாகவும் போரின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பிக்க எங்கு செல்வது எனத் தெரியாமல் அவர்கள் தத்தளிப்பதாகவும் ஐக்கிய நாட்டின் பாலஸ்தீன அகதிகள் பிரிவின் தலைவர் ஃபிலிப் லஸாரினி கூறினார்.